பாகவதமும் பகவானின் தோற்றமே

பாகவதமும் பகவானின் தோற்றமே


" alt="" aria-hidden="true" />


பாரதம் என்று அழைக்கப்படும் இந்தியாவில் புராணங்கள் இதிகாசங்கள் என்று கூறப்படும்   ஆன்மீக இலக்கிய படைப்புகள் காலம் காலமாய் இருந்து வருகின்றன.


 வியாசரால் எழுதப்பட்ட 18 புராணங்களும் இதில் அடங்கும்.  இந்த பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்ரீமத் பாகவதம் என்பது மகா புராணம் என்று அழைக்கப்படுகிறது.


 ஸ்ரீமத் என்றால் புகழ் மிக்கது, மிகவும் உயர்ந்தது எனப்படும், பாகவதம் என்பது  பகவானுடைய பகவானைப் பற்றிய லீலா தொகுப்பு என்று பொருள்படும். இதில் பகவானுடைய அவதாரங்கள் அவதாரங்களின் நோக்கங்கள் பற்றிய வரலாறுகள் விவரிக்கப்பட்டுள்ளது.  சிறந்த ஆன்மீக அறிவை மக்களுக்கு போதிக்கும் நூலாகும்.


பகவான் கிருஷ்ணர் பல வடிவங்களில் தோன்றுகிறான். அப்படி அவர் தோன்றுகின்ற வடிவங்களில் ஒன்றுதான் ஸ்ரீமத் பாகவதம்  என்ற புத்தக வடிவம் ஆகும். கிருஷ்ணருக்கும் ஸ்ரீமத் பாகவததிர்க்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


 மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக இறைவனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படைப்பின் தத்துவத்தை அறிந்து கொள்வதற்காக வேதங்களை தோற்றுவித்தார்  இறைவனின் அவதாரமாக இருந்த வேத வியாசர், அப்படி வேதங்களை தோற்றுவித்த வேத வியாசருக்கு ஏதோ ஒரு குறை மனதில் இருக்கத்தான் செய்தது. அந்தக் குறைகாண காரணம் என்ன என்று அவருக்கு புரியாமல் இருந்தது. அப்படி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தன்னுடைய குருவான நாரதரிடம்   “நான் புராணங்களையும் வேதங்களையும் எதிர்கால மனித குலத்திற்காக அர்ப்பணித்தேன் அப்படியிருந்தும் என் மனதில் அந்த வேதங்களை அர்ப்பணித்த ஒரு மகிழ்ச்சியும் சந்தோஷமும் என் மனதில் இல்லை இதற்கு காரணம் என்ன? ஏதோ ஒரு குறை என் மனதை வாட்டுகிறது.” எனக்கூறி தனது மனதில் ஏற்பட்டுள்ள  குறைவுக்கான காரணத்தை கேட்டார். கேட்டு உண்மையை உணர்ந்த நாரதர் வியாசரிடம் “ அனைத்தையும் சிறப்பாக செய்த தாங்கள் கிருஷ்ணரைப் பற்றிய கதைகளை அர்ப்பணிக்க வில்லை. கலியுகத்தில் பூமியில் மனிதர்களின் அனைத்து துன்பங்களையும் போக்கி இறைவனடி சேர்கின்ற உயர்ந்த அந்தக் கதைகளின் தொகுப்பை தாங்கள் அர்ப்பணிக்க வில்லை அதுதான் தங்கள் துன்பத்திற்கான காரணம்”  என்று விளக்கினார் மட்டுமன்றி வேதங்களின் நோக்கமே பகவானை திருப்திப்படுத்துவது அப்படியிருக்க அவரைப் பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் நீர் விவரிக்கவில்லை அதுவே உனது மன குறைவுக்கான காரணம் என்று சொன்னார். புரிந்துகொண்ட வியாசர் அதன்பிறகு தன் மனநிலையை ஒருநிலைப்படுத்தி பகவானுடைய லீலைகளை படைப்பதில் தன்முழு கவனத்தையும் செலுத்தினார் அதன் விளைவாக ஸ்ரீமத் பாகவதம் தோன்றியது. அதனால் ஸ்ரீமத் பாகவதத்ற்கு மகாபுராணம் என்ற பெயரும் உண்டு.